சத்தியமங்கலம் அக்.15: புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல அறக்கட்டளை சார்பில் 8வது புத்தக திருவிழா நாளை (16ம் தேதி) முதல் 20ம் தேதி வரை நகராட்சி திருமண மண்டபத்தில் நடக்கிறது. இது குறித்து விடியல் சமூக நல அறக்கட்டளை செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் கூறியிருப்பதாவது:இளைய தலைமுறையினரிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் விடியல் சமூகநல அறக்கட்டளை சார்பில் புன்செய் புளியம்பட்டியில் புத்தக திருவிழா நடத்தப்படுகிறது. தொடர்ந்து 8வது ஆண்டாக இந்த ஆண்டு புத்தக திருவிழா நாளை முதல் 20ம் தேதி வரை நடக்கிறது. இக் கண்காட்சியில், 20க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள் பங்கேற்கின்றனர். பல்வேறு தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. இதில், பங்கேற்க அனுமதி இலவசம்.வாசகர்கள் வாங்கும் அனைத்து புத்தகத்திற்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படும். தினமும் மாலை 6 மணிக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் பங்குபெறும் மாலை நேர கருத்தரங்கம் நடக்கிறது.