அறந்தாங்கி, அக்.15: அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மதுரை அருகில் உள்ள கீழடி அகழ்வாராய்ச்சிக்கு களப்பயணம் மேற்கொண்டனர். இப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில் மூன்றாவது அலகில் பண்பாடு என்ற பொருண்மையில் அகழாய்வுகள் என்ற பாடம் உள்ளது. அதைப் பற்றி மேலும் விரிவாக செயல்வழிக்கற்றல் மூலம் அறிந்துகொள்ள ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புகளைச் சேர்ந்த 60 மாணவர்கள் கீழடிக்கு களப்பயணம் சென்று வந்தனர்.இதனை பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன் துவக்கி வைத்தார். கீழடியில் அகழாய்வுகள் நடைபெற்ற விதம், கண்டறியப்பட்ட பொருட்களின் தொண்மை பற்றியும், தொல்லியல் துறையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார். மாணவர்கள் அகழாய்வு மேற்கொண்ட 55 இடங்களை பார்வையிட்டனர்.