வலங்கைமான்,அக்.15: வேதாரண்யம் மற்றும் வழியோர கிராமங்கள் பயன் பெறும் விதமாக வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. முன்னதாக இத்திட்டத்தில் வேதாரண்யம் பகுதிக்கு கும்பகோணம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து பாபநாசம்-வலங்கைமான் மற்றும் வலங்கைமான் -மன்னார்குடி சாலைவழியாக சாலையின் மையப்பரப்பில் இயந்திரத்தின் உதவியோடு பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பொருத்தி தண்ணீர் கொண்டு செல்லப்படுகின்றது. இந்த சாலையில் செல்லும் கனரக வாகனங்களால் இக்குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதும் அதை சரிசெய்வதும் தொடர் கதையாக உள்ளது.இந்நிலையில் கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் செம்மங்குடி பகுதியில் வேதாரண்யம் கூட்டுகுடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கால்வாய் போல் ஓடுகிறது. மேலும் சாலையும் பழுதாகியுள்ளதால் அப்பகுதியின் வழியே செல்லும் வாகனஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர்.