கம்பம், அக்.10: கம்பம் சிக்னலில் ஷேர் ஆட்டோக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதால் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.கம்பத்தில் சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கம்பத்தை ஒட்டி கேரளா அமைந்திருப்பதால் அங்கிருந்தும் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கம்பத்திற்கு வருகின்றனர். கம்பத்தை சுற்றியுள்ள கே.கே.பட்டி, நாராயணதேவன் பட்டி, சுருளிப்பட்டி மற்றும் அணைப்பட்டி போன்ற கிராமங்களிலிருந்தும் பொதுமக்கள் தங்களது அன்றாடத் தேவைகளுக்காக கம்பத்தை நாடி வருகின்றனர். கம்பத்தில் முக்கிய பகுதியாக விளங்குவது அரசமர சிக்னல் பகுதியாகும். சிக்னலில் இருந்து புது பஸ்ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை, கிராமச்சாவடி, உழவர்சந்தை என உள்ளிட்ட இடங்களுக்கு மக்கள் செல்கின்றனர். இதனால் தினமும் சிக்னலில் அளவுக்கதிகமான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.