குளித்தலை, அக்.10: இருசக்கர வாகனம் ஓட்டும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்து ஓட்டுங்கள் என விழிப்புணர்வு முகாமில் அறிவுறுத்தப்பட்டது.
குளித்தலை போக்குவரத்து காவல்துறை மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனை ஊழியர்களிடையே நல்லுறவை ஏற்படுத்தவும் போக்குவரத்து சாலைவிதிகள் குறித்து விழிப்புணர்வு முகாம் குளித்தலை போக்குவரத்து பணிமனையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமை வகித்து பேசுகையில், குளித்தலை நகரத்தில் போக்குவரத்து காவல்துறையும் போக்குவரத்து பணிமனை ஓட்டுநர்கள், நடத்துநர்கள் இடையே நல்லுறவோடு பணியாற்ற வேண்டும். மேலும் ஓட்டுநர்கள் தங்கள் பேருந்துகளை சாலையில் ஓட்டும்பொழுது செல்போன் பேசி ஓட்டக்கூடாது. கவனத்துடன் பயணம் செய்யவேண்டும். தற்பொழுது மோட்டார்வாகன சட்டத்தின்படி விபத்தில் ஒருவர் ஹெல்மெட் அணியாமலோ, குடிபோதையில் வாகனம் ஓட்டி இறந்தாலோ அவருக்கு விபத்து இழப்பீடு தொகை கிடைக்காது என காப்பீடு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.