ஈரோடு, அக்.10 : மகளிர் குழு மூலம் நியமிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய ஏஐடியுசி வலியுறுத்தி உள்ளது. ஈரோடு மாவட்ட உள்ளாட்சி துறை பணியாளர்கள் சங்கம் (ஏஐடியுசி) நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமையில் ஈரோட்டில் நடந்தது. செயலாளர் மணியன், துணை செயலாளர்கள் அப்புசாமி, ஞானசேகரன், பொருளாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்துக்களில் பணி செய்யும் துப்புரவு பணியாளர்களில், பாதிக்கும் மேற்பட்டோர் நிரந்தரமற்ற, ஒப்பந்த தொழிலாளர்கள், மகளிர் குழுவினர்களாக உள்ளனர். இவர்களுக்கு கலெக்டர் நிர்ணயித்த தினசரி கூலி ரூ.490 வழங்குவதில்லை. எனவே முழு ஊதியம் வழங்க வேண்டும். பணி நிரந்தரப்படுத்துதல் சட்டப்படி, இரண்டு ஆண்டில், 480 நாட்கள் பணி செய்தவர்களை நிரந்தரமாக்க வேண்டும்.