திருவாரூர், அக்.10: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கக்கோரி மறியலில் ஈடுபட்ட 50 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். கடந்தாண்டு நவம்பர் மாதம் 15ம்தேதி வீசிய கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை உட்பட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களில் நெல் சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு கடந்த ஆண்டிற்கான பயிர் காப்பீடு இழப்பீடு தொகை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இழப்பீடு தொகை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்காமல் ஒரு பகுதி விவசாயிகளுக்கு விடுபட்டு உள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 573 வருவாய் கிராமங்களில் 357 கிராமங்களுக்கு மட்டுமே இந்த பயிர் காப்பீடு இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு வழங்க கோரி கடந்த 5ம்தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய விவசாய சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.