காரைக்கால், அக்.10: காரைக்கால் மக்களுக்கான தீபாவளி இலவச பொருட்களை, உடனே வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெற்கு தொகுதி எம்எல்ஏ அசனா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து, காரைக்கால் தெற்குத்தொகுதி எம்.எல்.ஏ அசனா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தில் வசிப்போர் பெரும்பாலானோர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள். இவர்களூக்கு புதுச்சேரி அரசு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை காலத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு இலவச சர்க்கரை, மற்றும் இலவச வேஷ்டி-சேலை வழங்கி வந்தது. அதேபோல், பண்டிக்கை காலத்தில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பாப்ஸ்கோ நிறுவனமும் மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறையும் இணைந்து பல்பொருள் அங்காடி திறப்பதும் வழக்கமாக கொண்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டில் இதுவரை அப்படி திறப்பது தொடர்பாகவும், இலவச பொருட்கள் வழங்குவது தொடர்பாகவும் எந்தவித அறிவிப்பும் செய்யப்படவில்லை. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 19 நாட்களே உள்ள நிலையில் மக்களின் பெரும் வரவேற்பை பெற்ற பாப்ஸ்கோ பல்பொருள் சிறப்பு அங்காடியை திறக்காமல் இருப்பதும், பண்டிகை காலத்திற்கு பயன்படும் சர்க்கரை மற்றும் வேஸ்டி-சேலைகளை வழங்காததும் பெரும் வேதனையையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.