ஜோலார்பேட்டை, அக்.9: ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயிலில் கொண்டு செல்லும் தண்ணீர் நேற்றுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்காக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து கடந்த ஜூலை 12ம் தேதி முதல் ரயிலில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. ஜூலை 23ல் இருந்து கூடுதலாக 2வது ரயில் மூலம் 25 லட்சம் லிட்டர் என தினசரி 50 லட்சம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பணி நேற்றுடன் 159வது முறையாக என சுமார் 40 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர்ந்து பெய்த மழை, கிருஷ்ணா நதி நீர் வரத்து மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்ததால் குடிநீர் தட்டுப்பாடு குறைந்தது.