விஜயதசமி ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு என பாஜ வதந்தி

புதுக்கோட்டை, அக்.9: புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆர்.எஸ்.எஸ். சார்பில் விஜயதசமியை முன்னிட்டு நேற்று மாலை ஊர்வலம் மற்றும் பொது நிகழ்ச்சி நடத்துவதற்கு போலீசாரிடம் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை பரிசீலனை செய்து சில விளக்கங்கள் கேட்டு நிகழ்ச்சி அமைப்பாளருக்கு குறிப்பாணை வழங்கப்பட்டது. அவர்கள் அளித்த மனுவின் அடிப்படையில் பரிசீலித்து சிறிய மாறுதலுடன் ஊர்வலத்திற்கும், பொது நிகழ்ச்சி நடத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அனுமதி கோரிய இடமான இலுப்பூர் சின்னக்கடை வீதி மிகவும் சிறிய நெரிசலான பகுதி என்பதாலும், போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் என்பதாலும், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னைகளை கருத்தில் கொண்டும் அருகில் உள்ள இடத்தில் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஏற்க மறுத்து அவர்களாகவே நடத்த இருந்த ஊர்வலம் மற்றும் பொது நிகழ்ச்சியை ரத்து செய்து உள்ளதாக தெரிய வருகிறது. போலீசார் அனுமதியளித்த தகவலை மறைத்து வேண்டும் என்றே ஒருசிலர் சமூக ஊடகங்களிலும் போலீசார் அனுமதி மறுத்து விட்டதாக பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக தெரிய வருகிறது. இது முற்றிலும் பொய்யான மற்றும் தவறான தகவலாகும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: