சத்தியமங்கலம்: அங்கன்வாடி மையம் இணைந்த அரசு பள்ளிகளில் விஜயதசமியை முன்னிட்டு நடக்கும் மாணவர் சேர்க்கைக்கு பவானிசாகர் வட்டாரத்தில் உள்ள 3 மையங்களும் திறக்கப்படவில்லை. மழலைகள் வகுப்பு தொடங்கிய அங்கன்வாடி மையம் இணைந்த அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட்ட நிலையில் பவானிசாகர் வட்டாரத்தில் உள்ள 3 மையங்களும் திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயதசமி தினத்தன்று தனியார் பள்ளிகளில் பிரீகேஜி, எல்கேஜி வகுப்புகளுக்கு அட்மிஷன் நடப்பது வழக்கம். இந்த நிலையில் அரசு பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் கடந்த ஆண்டு முதல் பிரீகேஜி மற்றும் எல்கேஜி வகுப்புகள் துவங்கப்பட்டு அதற்கு ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து‘ விஜயதசமி தினத்தன்று தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவது போல் அரசு பள்ளிகள்இணைந்த அங்கன்வாடி மையத்தில் சேர்க்கை நடத்துமாறு தொடக்ககல்வி இயக்குநரகம் உத்தரவிட்டது.மேலும் மாணவர் சேர்க்கைக்காக பள்ளிகளை திறந்து வைக்குமாறு அறிவுறுத்தியது.