கோவில்பட்டி, அக்.4: கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட இனாம்மணியாச்சி ஊராட்சியில் அத்தைகொண்டான், இந்திராநகர், சுபாநகர், சீனிவாசநகர், லட்சுமிமில், ஆலம்பட்டி, இனாம்மணியாச்சி, சாலைப்புதுர், தெற்கு கங்கன்குளம் ஆகிய பகுதிகள் அடங்கியுள்ளன. இந்த ஊராட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கான அலுவலகம் இனாம்மணியாச்சியில் நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆட்கள் நடமாட்டம், பாதுகாப்பில்லாத இடமான, நீண்ட தொலைவில் உள்ள கிருஷ்ணா நகரில் ஊராட்சி அலுவலகம் அமைத்து செயல்பட இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதனை உடனடியாக ரத்து செய்யவும், இனாம் மணியாச்சியில் செயல்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை விரிவாக்கம் செய்து செயல்பட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கடந்த மாதம் 29ம்தேதி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினர். நேற்று இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் மார்க்சிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் மல்லிகா தலைமையில் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.