ஈரோடு, அக்.4: ஈரோடு மாநகரின் மைய பகுதியில் வர்த்தக நிறுவனங்கள் அதிகமாக உள்ள இடத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக லாரிகளை நிறுத்தி சரக்குகளை ஏற்றி, இறக்குவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஈரோடு மாநகரில் பெருகி வரும் வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும், மாநகராட்சி பகுதிகளில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், பாதாள மின்கேபிள் திட்டம் போன்ற திட்டப்பணிகள் நடந்து வருவதால் ஆங்காங்கே சாலைகள் தோண்டப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், மாநகரில் அதிகளவில் வர்த்தக நிறுவனங்கள் உள்ள கொங்காலம்மன் கோயில் வீதி, கந்தசாமி வீதி, புது மஜீத் வீதி, குப்பைக்காடு, காமராஜர் மேல்நிலைப்பள்ளி வீதி ஆகிய பகுதிகளில் மொத்த வியாபார மளிகை கடைகள், பேன்சி கடைகள், ஜவுளிக்கடைகள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடைகள், பாத்திரக்கடைகள் உள்ளன.இந்த பகுதிக்கு சரக்குகளை ஏற்றிக் கொண்டு வரும் லாரிகள், நடுரோட்டிலேயே நிறுத்தி சரக்குகளை ஏற்றி, இறக்கி வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.