அரக்கோணம், அக்.4: காட்பாடி- அரக்கோணம் மார்க்கத்தில் நேற்று தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசல் காரணமாக ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.வேலூர் மாவட்டம், காட்பாடி- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் மகேந்திரவாடி அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை ரயில்வே ஊழியர்கள் ரோந்து மற்றும் தண்டவாள பராமரிப்பு, கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.நேற்று காலை சுமார் 7.15 மணியளவில் மகேந்திரவாடி அருகே உள்ள தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இவ்வழியாக ரயில்களை இயக்க வேண்டாம் என சோளிங்கர் (பாணாவரம்) ரயில் நிலையத்திற்கு உடனே தகவல் கொடுத்தனர். இதனால் அவ்வழியாக வந்த ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன.