உத்தமபாளையம் அருகே 3 வீடுகளை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி

உத்தமபாளையம், அக்.1: உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டியில் 3 வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இதில் ஈடுபட்டவர்கள் வடநாட்டு கொள்ளையர்களா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டியில் நேற்று முன்தினம் இரவு, மந்தைக்குளம் என்ற இடத்தில் உள்ள 2 வீடுகள், இங்குள்ள செட்டியார் சாவடி அருகே உள்ள  வீடு என மொத்தம் 3 இடத்தில் கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். இந்த வீடுகள் அனைத்தும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக கட்டப்பட்டுள்ளன. இதில் மந்தைக்குளத்தை சேர்ந்த மின்சாரவாரிய அலுவலகத்தில் வேலை பார்க்கும் அழகுராஜா(44) மற்றும் இதே தெருவில் குடியிருக்கும் செல்வம் மனைவி விஜயா(46), உ.அம்மாபட்டி முத்துசாமிபுரத்தை சேர்ந்த ராமய்யா(55) ஆகியோரது வீட்டின் முன்பக்க கதவுகளை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வீடுகளில் உள்ள பீரோக்கள், அலமாரிகளில் பொருட்கள் இருக்கிறதா என பார்த்துள்ளனர்.

இந்த சத்தம் கேட்டு அழகுராஜா மற்றும் விஜயா ஆகியோரது  வீடுகளுக்குள் இருந்தவர்கள் எழுந்து பார்த்த போது கொள்ளையர்கள் இருந்துள்ளனர். இதனால் அவர்கள் கூச்சலிடவே உடனே அங்கிருந்து கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். ஆனாலும் அழகுராஜா வீட்டின் முன்பக்கம் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் ஒன்றை ஆக்ரோஷத்தில் பிடுங்கிய கொள்ளையர்கள் அதனை எடுத்து ரோட்டில் வீசி சென்றுள்ளனர். ராமய்யா என்பவரது வீட்டில் மட்டும் 1 செல்போன் மற்றும் பணத்தை திருடி உள்ளனர். நேற்று முன்தினம் இரவில் மழை கொட்டி உள்ளது. இதனை பயன்படுத்திய கொள்ளையர்கள் முகத்தில் துணிகளை மறைத்து கொண்டு வீடுகளுக்குள் புகுந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் முருகன், எஸ்.ஐ.ஜெயபாண்டி தலைமையில் விரைந்த போலீசார் தடயங்களை சேகரித்தனர்.

முகமூடியுடன் திரிந்த 4 கொள்ளையர்கள்

உ.அம்மாபட்டியில் கொள்ளைமுயற்சி நடந்த வீடுகளுக்கு பக்கத்தில் இருந்த சில கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகிய காட்சிகள் போலீசாரிடம் சிக்கின. இதில் 4 கொள்ளையர்கள் முகமூடி அணிந்துள்ளனர். உள்ளாடை மட்டுமே அணிந்து கைகளில் கடப்பாரை, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்துள்ளனர். எனவே, இவர்கள் வடநாட்டு கொள்ளையர்களாக இருப்பார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: