சென்னை: மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை கல்வி கற்பதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில், சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும் எனக்கோரி மாணவி அதிகை முத்தரசி (6) சார்பில் அவரது தந்தை பாஸ்கரன் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், கோயில் அருகே உள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகம் பிச்சைக்காரர்கள் ஓய்வெடுக்கும் இடமாகவும், சட்டவிரோத செயல்கள் நடைபெறும் இடமாகவும் பயன்படுத்தப்படுகிறது. சுகாதாரம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு பள்ளி மாணவ மாணவியருக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. பள்ளியை புதுப்பிக்க வேண்டுமென்று கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அரசு அதிகாரியிடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கல்வியை சிறப்பாக வழங்க அனைத்து ஏற்பாடும் செய்து வருவதாக கூறும் அரசும், அரசு அதிகாரிகளும் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியை மேம்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.