கோவில்பட்டி, அக். 1: கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் கிராமத்தில் புதிய ரேஷன் கடை அமைக்கக் கோரி கிராம மக்கள் ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் கிராமத்தில் உள்ள பெரியகுளம் கண்மாயில் குடிமராமத்து பணிகளை துவங்கிட வேண்டும். பழுதான ரேஷன் கடையை புதுப்பிக்க வேண்டும் அல்லது புதிய ரேஷன் கடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் 3 அங்கன்வாடி மையங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கவும், கிழக்கு அங்கன்வாடி மையத்திற்கு மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி செய்து தரவும், இளையரசனேந்தல் பிர்காவிற்கு உட்பட்ட 12 வருவாய் கிராமங்களை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இளையரசனேந்தல் கிராம மக்கள் கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கிராம மக்கள் தங்களது கோரிக்கை மனுவை ஆர்டிஓ விஜயாவிடம் அளித்தனர்.