கோவை, செப்.26:கோவை நகரில் சிக்னல்களில் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். கோவை அவிநாசி சாலை மேம்பாலம் அருகே உள்ள சிக்னல், எல்.ஐ.சி சிக்னல், அண்ணா சிலை சிக்னல், லட்சுமி மில் சிக்னல், நவ இந்தியா சிக்னல் ஆகிய 5 சிக்னல்களில் தனியார் அமைப்பு சார்பில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அங்குள்ள நான்கு சாலைகளில் வரும் வாகன ஓட்டிகள், ஹெல்ெமட் அணியாமல் வருதல், பச்சை விளக்கு எரிவதற்குள் வாகனத்தினை செலுத்துதல், இருசக்கர வாகனத்தில் 3 பேர் செல்லுதல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுவோர் வாகன பதிவு எண்களை அதிநவீன கேமரா துல்லியமாக படம் பிடித்து விடுகிறது. இந்த பதிவுகள் அனைத்தும் காட்டூரில் உள்ள உதவி கமிஷனர் அலுவலகத்திலுள்ள கணினியில் தெரியும். வாகன பதிவெண்ணை வைத்து உரிமையாளரின் பெயர், முகவரி ஆகியவற்றை அச்சடித்து அபராத சலான்கள் விதிமீறலில் ஈடுபடுவோரின் வீட்டுக்கு அனுப்பப்படும். இந்த 5 சிக்னல்களில் மட்டும் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலை விதிகளை மீறுகின்றனர். அவர்களுக்கான அபராத சலான்கள் போக்குவரத்து போலீசாரிடம் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதனை வாகன உரிமையாளர்களிடம் கொடுத்து அபராத தொகை வசூலிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவிக்கின்றனர்.