சிங்கம்புணரி, செப்.26: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் மேலவண்ணாயிருப்பு கிராமத்தில் மலைவாழ் மக்களுக்கான மக்களின் நலன் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சட்டப்பணிகள் ஆணைய செயலர் சார்பு நீதிபதி ராஜேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட வனவர் வினோத் குமார் முன்னிலை வகித்தார். இதில் நீதிபதி ராஜேஸ்வரி பேசும்போது, ‘‘மலைவாழ் மக்களின் குடும்பங்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளது. மலைவாழ் மக்கள் உரிமைகள் பாதுகாக்கும் வகையில் அவர்களது பிள்ளைகள் உயர் கல்விக்கும் உயர் பதவிக்கும் செல்ல ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இப்பகுதி மக்கள் தங்கள் பிரச்னைகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தை அணுகி இலவசமாக வழக்கறிஞர்கள் நியமித்து பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்க வழிவகை செய்யலாம். இதனால் காலவிரயம் பணம் விரையம் தடுக்கப்படும் என்றார்.