வேலூர், செப்.26:குடியிருப்பு கட்டிடங்களுக்கான அனுமதி வழங்குவதில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகார வரம்பை நகர் ஊரமைப்பு இயக்குனரகம் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.சென்னையை தவிர்த்து தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் இதுவரை 4 ஆயிரம் சதுரஅடி வரையில் தரை பரப்பு வரை, 4 குடியிருப்புகள் வரை கொண்ட தரை தளம் மற்றும் முதல் தளம் அல்லது வாகன நிறுத்துமிடம் மற்றும் இரண்டு தளங்களுக்கு கட்டிட தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்டு வந்தது. அதேபோல் 2 ஆயிரம் சதுர அடி வரையுள்ள வணிக நோக்கம் கொண்ட கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதி வழங்கப்பட்டு வந்தது.இந்த அளவுக்கு மேல் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள், வணிக நோக்கம் கொண்ட கட்டிடங்களுக்கு உள்ளூர் திட்ட குழுமங்களிடம் அனுமதி பெற வேண்டும். இந்நிலையில் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள், 2019 வெளியிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதை தொடர்ந்தும், உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகார பகிர்வு வழங்க கோரிக்கைகள் விடுக்கப்பட்டதை தொடர்ந்து கட்டிட அனுமதி வழங்கும் அதிகாரத்தில் பகுதி மாற்றம் செய்து நகர் ஊரமைப்பு இயக்குனர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டுள்ளார்.