பேராவூரணி, செப்.24: பேராவூரணி அருகே உள்ள மாவடுகுறிச்சி ஊராட்சி ஆத்தாகுளம் ஏரியை ஆக்கிரமிப்பின் பிடியிலிருந்து மீட்டு தூர்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட ஆத்தாளூர் வீரமாகாளியம்மன் கோயில் தொடங்கி, பட்டுக்கோட்டை சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு பின்புறம் முதல், மாவடுகுறிச்சி ஊராட்சி தென்னங்குடி கீழக்காடு வரை விரிந்து பரந்து சுமார் 113 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆத்தாகுளம் இன்று ஆக்கிரமிக்கப்பட்டு மண்மேடிட்டு, திடலாக மாறி, தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. ஆத்தாளூர், தென்னங்குடி கீழக்காடு பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசனத்திற்கு முக்கிய நீராதாரமாகவும், கால்நடைகள் தாகம் தீர்க்கவும், விவசாய மற்றும் குடிநீர் ஆழ்துளைக் கிணறுகளுக்கு நீர்மட்டம் உயர்வும், பொது மக்களுக்கு குளிப்பது, துவைப்பது என பலவகையிலும் பயன்பட்டு வந்த ஆத்தாகுளம் அதிகாரிகளின் அலட்சிய போக்கால் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி வறண்டு போய் உள்ளது. இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ஒரு சில இடங்களில், சிலர் மண்ணை அனுமதி இன்றி அள்ளி வருகின்றனர். இதனால் பெரும் பள்ளமாக சில இடங்களில் உள்ளது.