அறந்தாங்கி, செப்.20: அறந்தாங்கி அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.அறந்தாங்கி ஒன்றியம் மேற்பனைக்காடு ஊராட்சி மேற்பனைக்காடு கிழக்கு மாரியம்மன் கோவில் அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பணிகள் நடைபெற்றன. இந்த பணிகள் முடிந்து பயனாளிகள் தங்கள் ஊருக்கு செல்வதற்காக சாலை ஓரம் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு சரக்கு ஆட்டோவில் நூறுநாள் வேலைத்திட்ட பயனாளிகள் ஏறி உள்ளனர். ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி சாலை ஓரம் கவிழ்ந்தது. சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் சகுந்தலா, ஞானசுந்தரி,தேவிகா, தேவி, ராஜேஸ்வரி, மாலதி, சந்திரா, மலர், தெய்வானை, சித்திரவள்ளி, சித்ரா, காளியம்மாள், சாந்தி, சித்ரா, வள்ளிக்கண்ணு, ஜானகி உள்ளிட்ட 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் உள்ளோர் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.