புவனகிரி, செப். 20: கீரப்பாளையத்தில், மின்சார வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. இங்கிருந்து செல்லும் மின்சாரம் குறைவான மின் அழுத்தமாக இருப்பதால் பல கிராமங்களில் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாது லேசாக காற்று அடித்தாலும் மழை பெய்தாலும் அன்று முழுவதும் மின்சாரம் இருக்காது. இதுகுறித்து புகார் தெரிவிக்க சென்றாலும் கீரப்பாளையம் மின்சார வாரிய பொறியாளர் பணியிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே காலியாக இருக்கிறது. இதனால் இப்பகுதி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மின்சார வாரிய உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து கடந்த பல மாதங்களாகவே எவ்வித நடவடிக்கையும் இல்லை என கூறுகின்றனர்.