புதுக்கோட்டை, செப். 19: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சத்துணவு பணியாளர் காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டுமென ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.புதுக்கோட்டையில் தமிழக சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட கவுரவ தலைவர் முத்து சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கடுமையான விலைவாசி உயர்வால் காய்கறி, மளிகை, விறகு, ஆகியவை வாங்க முடியவில்லை. 2015ம் ஆண்டு வழங்கப்பட்ட ரூ.1.70 பைசா மட்டுமே தற்போதும் வழங்கப்படுகிறது. ஆனால் சத்துணவு மானியம் உயரவில்லை. எனவே சத்துணவு சிறந்த முறையில் வழங்க மாணவர்களுக்கு தலா ரூ.4 உயர்த்த வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் மிக அதிக அளவில் காலி பணியிடங்கள் உள்ளது. ஒரு ஊழியர் இரண்டு, மூன்று மையங்களை பார்வையிடுவது 100க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளது.புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நடுநிலைப்பள்ளியில் 300 மாணவர்களுக்கு சமைக்க ஒரு சமையலர் மட்டுமே உள்ளார். அவர் எந்த வேலையை பார்ப்பது என தெரியாமல் அவதிப்படுகிறார். நகராட்சி நிர்வாகமோ, மாவட்ட நிர்வாகமோ கண்டுகொள்ளவில்லை. சத்துணவு சிறப்பாக இருக்க வேண்டுமெனில் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஒழுங்காக வேலைபார்க்ககாத அரசு ஊழியர்கள் சத்துணவு மையங்களுக்கு போங்க, அங்கே தான் சும்மா இருக்கலாம், அங்கு வேலையே இல்லை என்று சத்துணவு பணியை கொச்சைப்படுத்தி பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மாவட்ட செயற்குழு கண்டனம் தெரிவிப்பது.