குடிபோதையில் தகராறு; அண்ணனை கொன்ற தம்பி கைது

சேலம், செப்.11: சேலம் கொண்டலாம்பட்டி பெரியபுதூர் சந்தனகாரன்காடு பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(75). கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் கொண்ட இவர், அவரது தம்பி பழனிசாமி(60) வீட்டிற்கு எதிரே குடியை போட்டு வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் மர்மமான முறையில் முத்துகிருஷ்ணன் இறந்து கிடந்தார். குடிபோதையில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்பட்டது. இதுகுறித்த தகவலின் பேரில், கொண்டலாம்பட்டி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.இந்நிலையில், முத்துகிருஷ்ணனின் தம்பி பழனிசாமி, பெரியபுத்தூர் கிராம நிர்வாக அதிகாரியிடம் நேற்று சரண் அடைந்தார். தனது அண்ணன் முத்துகிருஷ்ணன், குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டதாகவும் கோபத்தில் கீழே தள்ளிவிட்டு, கழுத்தை நெரித்து கொன்றதாகவும் கூறினார். இதையடுத்து கொண்டலாம்பட்டி போலீசார், பழனிசாமியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: