விருத்தாசலம், செப். 11: விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் பேருந்துகளை மறித்து கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் விருத்தாசலம், மங்கலம்பேட்டை, உளுந்தூர்பேட்டை, கம்மாபுரம், நெய்வேலி, பெண்ணாடம், திட்டக்குடி, வேப்பூர், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் இருந்து சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். வெகுதூரத்தில் இருந்து வரும் மாணவர்கள் கல்லூரி விடுதிகளில் தங்கி வருகின்றனர்.மேலும் மங்கலம்பேட்டை மற்றும் உளுந்தூர்பேட்டை பகுதிகளிலிருந்து மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தினமும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்து கல்லூரிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் மதியம் 2 மணியளவில் கல்லூரி முடிந்து விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் இருந்து மீண்டும் தங்கள் பகுதிக்கு பேருந்துகளில் பயணம் செய்யும்போது, தனியார் பேருந்துகள் அந்த நேரத்தில் வருவதற்கான நேரம் இல்லை என்பதால், அரசு பேருந்துகளை மட்டுமே நம்பி மாணவர்கள் செல்கின்றனர்.