குலசேகரம், செப்.11: களியல் - அழகியபாண்டிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு குழாய் பதிப்பதற்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக சுருளோடு முதல் பொன்மனை வரை சாலை மோசமாக சீரழிந்து காணப்படுகிறது.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் போராட்டங்கள் நடத்தும் நிலை ஏற்பட்டது. தற்போது குலசேகரம் முதல் களியல் வரை குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மழைகாலத்தில் சாலை சகதியாகவும், வெயில் நேரத்தில் புழுதி பறப்பதாலும் மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலையுள்ளது.இந்த நிலையில் கடந்த 24ம் தேதி குலசேகரம் ஆரணிவிளை பகுதியை சேர்ந்த கவுரி( 69) என்ற பெண் குலசேகரத்திலுள்ள சர்ச் திருவிழாவுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது மோசமான சாலையில் வழுக்கி விழுந்து படுகாயமடைந்தார். மார்த்தாண்டத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார்.