கம்பம் செப்.10: கம்பம் அரசு மருத்துவமனையில் நீண்ட இழுபறிக்கு பின்பு ரத்த வங்கி தொடங்கப்பட்டது. கம்பம் அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி தொடங்குவதற்காக ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் குளிர்சாதன அறைகள், லேப் பொருட்கள் தயாராக இருந்தும் லேப் டெக்னீசியன்கள் இல்லாததால் ரத்த வங்கி செயல்படவில்லை. இது குறித்து தினகரன் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று ரத்த வங்கி தொடங்கப்பட்டது. கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் திறந்து வைத்தார். தேனி மாவட்ட சுகாதார இணை இயக்குனர் சரஸ்வதி முன்னிலை வகித்து குத்துவிளக்கேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் தேனி மாவட்ட சுகாதார இணை இயக்குனர் மருத்துவர் சையது சுல்தான் இப்ராஹிம், கம்பம் அரசு மருத்துவமனையின் முன்னாள் மருத்துவ அதிகாரி மணி மோகன் மற்றும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி மாவட்ட ரத்த பரிமாற்ற அலுவலர் மருத்துவர் மணிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர். கம்பம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பொன்னரசன் கலந்து கொண்டு பேசும்போது, உலகில் சிறந்த தானம் ரத்த தானம். ரத்த தானத்தால் விலை மதிக்க முடியாத உயிர்கள் காப்பாற்றப்படுகிறது. தற்சமயம் பொதுமக்களுக்கு ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றார்.