நாமக்கல், செப்.10: நாமக்கல்லை அடுத்துள்ள சிங்கிலிப்பட்டியில், குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்யக் கோரி, ஏராளமான பெண்கள் காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நாமக்கல்லை அடுத்த சிங்கிலிப்பட்டி கிராம ஊராட்சியில், பொரசபாளையம் மற்றும் அருந்ததியர் காலனியில் 2 ஆயித்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த 3 பகுதியிலும் பஞ்சாயத்து நிர்வாகத்தின் சார்பில், 10 போர்வெல் போடப்பட்டுள்ளது. மேலும், 7 குடிநீர் சேமிப்பு தொட்டிகளும் கட்டப்பட்டுள்ளது. காவிரி நீருடன் போர்வெல் நீரை கலந்து, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில போர்வெல்லில் தண்ணீர் வற்றி விட்டது. மேலும், மின் மோட்டார்களும் பழுது அடைந்து விட்டது. இதனால் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.