மயிலாடுதுறை, செப்.10: மயிலாடுதுறை அருகே புற்றுநோய் தாக்கத்தால் தன் 2 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட தாயின் உருக்கமான கடிதத்தை படித்த கணவர் கண்ணீர்விட்டு அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள வடமட்டம் அப்துல் ஆரிப்(32). மனைவி நிலோபர் பர்வீன்(27) தம்பதியினர் கத்தார் நாட்டில் இருந்துள்ளனர். 4 வயதில் அப்ரினாவும் ஒன்னரைவயதில் ஆஃப்ராவும் என இரண்டு குழந்தைகள் இருந்தனர். கடந்த 6 மாதத்திற்கு முன் தனது மாமனார் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு தம்பதியினர் வந்திருந்தனர். அப்துல்ஆரிப் மட்டும் கத்தார் நாடு சென்றுவிட்டார். இதற்கிடையே உடல்நிலை பாதிக்கப்பட்ட பர்வீனுக்கு, உடல் மெலிந்தும் தலைமுடி கொட்டிவந்த நிலையில் ரத்த வாந்தியும் எடுத்துள்ளார். மருத்துவரிடம் பரிசோதனை செய்ததில் புற்றுநோய் அதிகரித்துள்ளதை தெரிந்துகொண்டார். இதனால் வேதனையடைந்த பர்வீன், தான் தாய் இல்லாமல் பட்ட சிரமத்தை எண்ணிப்பார்த்து தற்கொலை முடிவு எடுத்ததுடன், தன் குழந்தைகளும் தாய் இல்லாமல் தவிக்கக்கூடாது என்று 7ம் தேதி இரவு தனது சகோதரிக்கு செல்போன்மூலம் கூறியுள்ளார். சகோதரி அதற்கு ஆறுதல் வார்த்தை கூறினார். இந்நிலையில் அன்று இறவே தன் குழந்தைகளைக்கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார். நேற்றுமுன்தினம் காலையில் அவரது சகோதரி போன்செய்தபோது செல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதன்பிறகுதான் இந்த சம்பவம் தெரியவந்தது. பாலையூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர். மயிலாடுதுறை ஆர்டிஓ கண்மணி விசாரணை மேற்கொண்டார்.