உடன்குடி, செப். 10: உடன்குடி அருகே உள்ள கலியன்விளை கிராமத்தில் குடிநீர், பஸ் வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமின்றி கிராம மக்கள் அல்லாடி வருகின்றனர்.உடன்குடி யூனியன் வெங்கட்ராமானுஜபுரம் பஞ்சாயத்திற்குட்பட்டது கலியன்விளை. உடன்குடியில் இருந்து சுமார் 5 கிமீ தூரத்தில் உள்ள இக்கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித் வருகின்றனர். இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கென தாமிரபரணி கூட்டுக்குடிநீர் சப்ளை செய்ய சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டது. சிறு மின்விசை திட்டத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மின்மோட்டாரும் பொருத்தப்பட்டது. இந்த மின்மோட்டார் பழுதாகி விட்டது. அடிபம்பும் பழுதாகி காட்சிப்பொருளாக நிற்கிறது. இக்கிராமத்திற்கான குடிநீர் திட்ட பணிகள் முழுமையாக முடங்கி விட்டதால் குடிநீர் மற்றும் அவசர தேவைக்கு ஒரு குடம் குடிநீர் ரூ.10க்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் உழைப்பில் பாதி வருமானத்தை தண்ணீர் தேவைக்கே பயன்படுத்தி அல்லல்பட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த ஊரின் வழியாக உடன்குடிக்கு 3 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. ஏதேனும் அவசர தேவைக்கு உடன்குடிக்கு வந்து விட்டால் இங்கிருந்து வெளியூர்களுக்கு சென்று விடலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது பேருந்துகள் ஏதும் இயக்கப்படாததால் எந்தவொரு தேவையானாலும் வாடகை வாகனத்தில்தான் கூடுதல் கட்டணம் கொடுத்து பயணம் செய்யும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.