உடன்குடி, செப். 10: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவையொட்டி கடற்கரையில் ஏராளமான பாசிமாலை விற்பனையாளர்கள் குவிந்து வருகின்றனர். பாசிமாலை விற்பனையும் சூடுபிடித்துள்ளது. மைசூருக்கு அடுத்தப்படியாக தசரா திருவிழா, வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலாகும். இங்கு வருகிற 29ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கி அக்.8ம் தேதி சூரசம்ஹாரத்துடன் நிறைவடைகிறது. இதையொட்டி தசராவிற்கு வேடமணியும் பக்தர்கள் ஏராளமானோர் விரதம் துவங்கி உள்ளனர். 61 நாட்கள், 41, 21, 11 நாட்கள் என அவரவர் சூழலுக்கு தகுந்தாற்போல் விரதம் மேற்கொள்கின்றனர். விரதமிருக்கும் பக்தர்கள், குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் புனித நீராடி கடற்கரை பகுதியில் விற்பனை செய்யப்படும் பாசி மாலைகளை வாங்கி கடலில் கழுவி அம்மன் பாதத்தில் வைத்து கழுத்தில் அணிந்து கொள்வர்.