திண்டிவனம், செப். 10: விழுப்புரம் வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திண்டிவனத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சேரன் தலைமை தாங்கினார். கருத்தங்கின் முதல் அமர்வு, வன்கொடுமை தடுப்புச் சட்டம் 30வது ஆண்டில் என்ற தலைப்பில் நடந்தது. தொடர்ந்து புதிய கல்விக் கொள்கை திட்டத்தை எதிர்த்து நாம் செய்ய வேண்டிய வழிமுறைகள் என்ற தலைப்பில் 2வது அமர்வு நடந்தது.இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற விசிக பொதுச்செயலாளரும், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை.ரவிக்குமார் பேசுகையில், மத்திய அரசு அறிவித்துள்ள புதிய தேசிய கல்வி கொள்கை ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் ஒரு முயற்சியாகும். மேலும் மத்திய அரசு கொண்டு வந்த இந்த குலக்கல்வி திட்டத்தை தமிழ்நாட்டில் முதன்முதலில் விடுதலைசிறுத்தைகள்கட்சிதான் எதிர்த்தது.