புதுக்கேட்டை,ஆக.22: புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பொறியில் கல்லூரி அமைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். புதுக்கோட்டடை மாவட்டத்தில் கறம்பக்குடி பகுதியில் ஒரு அரசு கலை அறிவியல் கல்லூரியும், அறந்தாங்கியில் ஒரு கலை அறிவியல் கல்லூரியும் உள்ளது. புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரி மற்றும் பெண்கள் கலை அறிவியல் கல்லூரி என 4 கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளது. இந்த கல்லூரிகளில் ஏழை எளிய விவசாயிகளின் பிள்ளைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நீண்டநாட்களாக மாவட்டத்திற்கு அரசு பொறியியல் கல்லூரி வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை பொறியியல் கல்லூரி அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிக பணம் கொடுத்து தனியார் கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் சேர்ந்து படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அருகாமையில் உள்ள திருச்சி, மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அரசு பொறியியல் கல்லூரி உள்ளது. ஆனால் புதுக்கோட்டையில் மட்டும் ஏன் அரசு பொறியியல் கல்லூரி அமைக்கவில்லை என்று தெரியவில்லை. இதனால் இனிவரும் காலங்களிலாவது புதுக்கோட்டை மாவட்டத்திற்கு என தனியாக ஒரு அனைத்து துறைகளுடன் கொண்ட பொறியியல் கல்லூரியை அமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.