விஷவாயு தாக்கி இறந்தோர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

நாகை, ஆக.20: நாகையில் பாதாள சாக்கடை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் நாகைமாலி தலைமை வகித்தார். நாகை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு எதிரே பாதாள சாக்கடையை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி இறந்த மாதவன், சக்திவேல் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ-.20 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உடனே வழங்க வேண்டும். பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். பாதாள சாக்கடை அடைப்பை நீக்க மனிதர்களை பயன்படுத்துவதை கைவிட்டு ரோபோக்களை பயன்படுத்த வேண்டும். நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் இஎஸ்ஐ, பிஎப் பிடித்தம் செய்ய வேண்டும் ஆகிய கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நாகை நகர செயலாளர் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் பகு, சிஐடியூ மாவட்ட செயலாளர் மணி, மாவட்ட தலைவர் ஜீவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: