சிறுவாணி அணைப்பகுதியில் நிலச்சரிவு

கோவை, ஆக.14:   கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சிறுவாணி அணையின் நீர் தேக்க பரப்பு 22.46 சதுர கி.மீ. 15 மீட்டர் வரை நீர் தேக்க முடியும். அணையின் நீர் பிடிப்பு பகுதியான முக்தியாறு, பட்டியாறு, வெள்ளிங்கிரி ஓடை உள்ளிட்ட பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. தொடர்ந்து 5 நாட்களில் ஆயிரம் மி.மீ., அளவிற்கும் அதிகமான மழை பதிவானது. காட்டாற்று வெள்ளத்தால், அணையின் நீர் தேக்க பகுதியில் உள்ள மண் தீவு மற்றும் மலை முகடுகளில் மண் சரிவு ஏற்பட்டது. 50 முதல் 200 அடி வரை நிலச்சரிவு காணப்பட்டது.

 குறிப்பாக கோவை சிறுவாணி மலைப்பகுதி ரோட்டில் உள்ள மயிலோன் பங்களா, குகை பாதை சந்திப்பு, நீரோடை பகுதியில் மண் சரிந்து காணப்பட்டது. நீரேற்று நிலையத்திற்கு அருகேயுள்ள மண் மேடுகள் சரிந்து விட்டது. இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள மலை கிராம மக்கள் கேரள நீர் பாசனத்துறையினருக்கும், கோவை குடிநீர் வடிகால் வாரியத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர். இரு மாநில அதிகாரிகள் மன்னார்காடு வழியாக சிறுவாணி அணைக்கு செல்ல முயன்றனர். அணைக்கு 5 கி.மீ தூரம் முன்பாக பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு 200 மீட்டர் தூரமுள்ள ரோடு மாயமாகியிருந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சீரமைப்பு பணி நடத்த முடியாத நிலை ஏற்படுள்ளது. கோவை சிறுவாணி அடிவாரத்தில் இருந்து 13 கி.மீ தூரம் பல இடங்களில் மண் மூடி காணப்படுகிறது. இதேபோல் கேரள வனப்பகுதி ரோடும் நிலச்சரிவால் நிலை குலைந்து விட்டது. மண் சரிவு அதிகமானதால் பாதுகாப்பு கருதி 3.5 மீட்டர் உயரத்திற்கு நீர் திறந்து வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள அதிகாரிகள், கோவை வன எல்லைப்பாதை வழியாக சிறுவாணி அணைக்கு சென்று சீரமைப்பு பணி நடத்த திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக இரு மாநில அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இன்று அதிகாரிகள் சிறுவாணி அணைக்கு சென்று சீரமைப்பு பணிகள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: