மன்னார்குடி, ஆக. 14: மன்னார்குடி 32 வது வார்டு ஆர்பி சிவம் நகர் மற்றும் பாரி நகரை சேர்ந்த பெண்கள் தங்கள் பகுதிக்கு சுகாதாரமான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி நகராட்சி ஆணையரிடம் மனு அளித்து வலியுறுத்தினர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி 32 வது வார்டு ஆர்பி சிவம் நகர், பாரி நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 250 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் குடிநீர் தேவைக்காக அருகில் உள்ள பைபாஸ் சாலை மற்றும் வஉசி சாலைகளில் அமைந்துள்ள ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர்விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் விநியோகம் செய்யப்பட்டு வந்த குடிநீரை வேறு பகுதிகளுக்கு மாற்றி விட்டு ஆர்பி சிவம் நகர், பாரி நகர் பகுதி மக்களுக்கு அதே பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான புல் வளர்க் கும் பண்ணையில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலம் மேற்கண்ட பகுதிகளுக்கு கடந்த 1 வார காலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.தற்போது விநியோகம் செய்யப்படும் குடிநீர் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக குற்றம்சாட்டியும் பழைய இடத்திலிருந்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டுமென்றும் அப்பகுதியை சேர்ந்த ஆர்பி சிவம்நகர் மற்றும் பாரி நகர் நலச்சங்கம் சார்பில் அதன் செயலாளர் பிரபாகர் உள்ளிட்டோர் தலைமையில் ஏரளமான பெண்கள் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து ஆணையர் (பொ ) இளங்கோவனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.