ஆற்காடு, ஆக.11: ஆற்காடு அருகே உயர் மின் அழுத்தம் காரணமாக 40 வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதமடைந்தது. ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் ஹன்சா நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் உயர் மின்அழுத்தத்தால் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு, ஒயர்கள், எலக்ட்ரிக் சாதனங்கள் பழுதாகி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் கூறியும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் திடீரென உயர்மின் அழுத்தம் ஏற்பட்டது. இதனால் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மின்விளக்குகள், டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதனங்கள் சேதமானது. முன்னதாக அவற்றில இருந்து புகை வந்ததால் பொதுமக்கள் அலறியடித்தபடி வீட்டை விட்டு வெளியே ஓடினர். அப்பகுதியில் அடிக்கடி மின்சாதன பொருட்கள் சேதமாவதை தடுக்க மின்வாரிய அதிகாரிகள் தலையிட்டு சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.