மேச்சேரி, ஜூலை 23: 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து, மேச்சேரியில் பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மேச்சேரி மற்றும் சுற்றுப்புற பகுதியான தெத்திகிரிப்பட்டி, வெள்ளாளர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணி ஒதுக்கீடு செய்யாமல் அசு அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்து நேற்று காலை 200க்கும் மேற்பட்ட பயனாளிகள் மேச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மேச்சேரி தனி வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இன்னும் ஒரு வார காலத்திற்குள் அனைத்து பகுதி மக்களுக்கும் மகாத்மா தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பணி ஒதுக்கீடு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாக உறுதி அளித்தார். இதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்