வேலூர், ஜூலை 23: வேலூர் மக்களவை தொகுதிக்கான 28 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து வேட்பு மனுத்தாக்கல் கடந்த 11ம் தேதி தொடங்கி கடந்த 18ம் தேதி முடிவடைந்தது. இதில் திமுக சார்பில் கதிர்ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உட்பட 50 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர்.இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 19ம் தேதி நடந்தது. அப்போது ஒரு சில புகார்களின் அடிப்படையில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களின் மனுக்கள் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் ஏற்கப்பட்டது. மேலும் பரிசீலனையின்போது போதிய ஆவணங்கள், டெபாசிட் தொகை செலுத்தாதது உள்பட பல்வேறு காரணங்களுக்காக 19 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 31 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.