சீர்காழி, ஜூலை 19: சீர்காழி தாடளான் கோயில் மெயின் ரோட்டில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரியாப்பிள்ளை குளம் உள்ளது. இந்த குளம் அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்ந்து நல்ல குடிநீர் கிடைத்து வந்தது. ஆனால் காலப்போக்கில் அரியாப்பிள்ளை குளம் ஆக்கிரமிப்பாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் வறண்டு, செடி, கொடிகள் முளைத்து காடுகள்போல் காணப்பட்டு வருகிறது. இந்த குளத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிலர் தங்களுக்கு சொந்தமென சொந்தம் கொண்டாடி குளத்தை பிளாட் போட்டு விற்பனை செய்ய முயன்றனர். இதனை அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினர்.இந்நிலையில், மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டம் சீர்காழி நகராட்சி பகுதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன் அரியாப்பிள்ளை குளத்தைத் தூர்வாரும் பணி நகராட்சி ஆணையர் அஜிதா பர்வின் தலைமையில் தொடங்கியது. இதில், நகராட்சி மேலாளர் ஆனந்தராஜ், நகரமைப்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன், பணிதள மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வர் முத்துகிருஷ்ணன், துப்புரவு ஆய்வாளர் மோகன் உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள், ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் ஜேசிபி இயந்திரம், டிராக்டர்கள் ஆகியவற்றின் உதவியுடன் குளத்தில் முளைத்திருந்த செடி, கொடிகள், குப்பைகளை அகற்றி கரைகளைப் பலப்படுத்தும் பணியை செய்தனர்.