நாமக்கல், ஜூலை 18: 7 ஆண்டு கால போராட்டத்துக்கு பின், நாமக்கல் டிஇஓ அலுவலகத்துக்கு நிரந்தர வாகன ஓட்டுனர் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலக பயன்பாட்டில் இருந்த ஜீப், கடந்த 2012ம் ஆண்டு தகுதியிழப்பு செய்யப்பட்டது. இதையடுத்து ஜீப் ஓட்டுனர் பணியிடம், மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து எடுக்கப்பட்டு, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்துக்கு மாற்றப்பட்டது. ஓராண்டுக்கு பின் 2013ம் ஆண்டில் மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு, பள்ளி கல்வித்துறை புதிய ஜீப்பை ஒதுக்கியது. ஆனால், வாகன ஓட்டுனர் பணியிடம் ஒதுக்கப்படவில்லை. இதனால், நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலராக வரும் பல அதிகாரிகள், தங்களது சொந்த வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு ஆய்வுக்கு சென்று வந்தனர். சில சமயங்களில் மாற்றுப்பணி என்ற அடிப்படையில், அரசு பள்ளிகளில் காவலாளி, அலுவலக உதவியாளர்கள் வாகனங்களை இயக்க தெரிந்தவர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர்.