பொன்னமராவதி, ஜூலை 18:பொன்னமராவதி பகுதியில் ஒருசில பகுதிகளில் பெய்த மழையினை பயன்படுத்தி விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்யும் பணியினை தொடங்கியுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பொன்னமராவதி பகுதியில் போதிய மழை பெய்யவில்லை.
இதனால் இப்பகுதியில் எந்த விவசாயமும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் இப்பகுதியில் ஒருசில பகுதிகளில் பரவலாக மழைபெய்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த மூன்று நாட்களாக மழைபெய்தது. இந்த மழையினைப் பயன்படுத்தி நகரப்பட்டி, கல்லம்பட்டி, சொக்கநாதபட்டி, அம்மன்குறிச்சி, சங்கம்பட்டி, ஆலவயல், கண்டியாநத்தம், புதுப்பட்டி, கேசராபட்டி, உலகம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி செய்யும் பணியினை தொடங்கியுள்ளது.உழவு செய்ய டிராக்டர் வண்டியினை வைத்து உழவு செய்கின்றனர்.ஆனால் நிலக்கடலை பருப்பு போட மாடுகள் மூலம் தான் இப்பகுதியில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகின்றது. இதற்கு உழவு மாட்டிற்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் கிராமங்களில் வீட்டுக்கு ஒரு ஜோடி உழவு மாடுகள் இருக்கும் ஆனால் இன்று ஊருக்கு ஒரு ஜோடி அல்லது இரண்டு ஜோடி உழவு மாடுகள் மட்டுமே உள்ளது.