ராஜபாளையம், ஜூலை 16:மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கண்டித்து ராஜபாளையம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. தொழிலாளர்களுக்கு பாதகமான இந்த சட்ட திருத்தத்தை கண்டித்து அரசு போக்குவரத்து சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் ராஜபாளையம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க நிர்வாகி முத்தரசு தலைமை வகித்தார். நிர்வாகி முத்துராஜ் முன்னிலை வகித்தார். சன்னாசி, பாண்டியராஜ், பால்சாமி, ஓய்வு பெற்றோர் சங்கம் சார்பில் காத்தப்பன், சங்கையா, வெங்கடசாமி, நாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.