திருவாரூர், ஜூன் 27: தமிழகத்தில் கடந்த ஆண்டில் மழையின் அளவு குறைந்தது மற்றும் மழைநீரை சேகரிப்பதில் தமிழக அரசு அலட்சியமாக இருந்து வந்தது மற்றும் முக்கொம்பு அணை உடைப்பு காரணமாக ஆற்று நீர் வீணாக கடலில் கலந்தது போன்றவற்றின் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி தற்போது மாநிலம் முழுவதும் குடிநீர் பஞ்சம் என்பது தலைவிரித்தாடுகிறது. இதனையடுத்து தமிழக அரசு தற்போது மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என மீண்டும் உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருவாரூர் நகராட்சி பகுதிகளிலும் இந்த மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டுமென நகராட்சி கமிஷனர் சங்கரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நகராட்சி பகுதியில் 30 வார்டுகளிலும் உள்ள பொது மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 50.27 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்ய பட்டு வருகிறது. இந்நிலையில் சில ஆண்டுகளாகவே மழை அளவு குறைந்ததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. மேலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் அமைக்கப்படாததன் காரணமாக மழைக்காலங்களில் மழைநீர் வீணாக தெருக்களில் ஓடும் நிலை இருந்து வருகிறது.மேலும் திருவாரூர் நகர பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் என்பது தற்போது கவலை அளிக்கும் வகையில் இருந்து வருகிறது. இந்த நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்கவும் வருங்காலங்களில் நகரில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்கும் வகையிலும் நகராட்சி நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.