சேலம், ஜூன் 25: சேலம் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பை தீவிரப்படுத்த வலியுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில் நெய்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிலர் மனு ஒன்றை அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘பருவமழை பொய்த்ததால், நடப்பாண்டு மாநிலம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, மழைநீர் சேகரிப்பு தற்போது அவசியமாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் இதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதனிடையே, நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் எங்கள் பகுதியில் பெரிய அளவிலான வீடுகள் இல்லை. இதனால், மழைநீர் சேகரிப்பில் சிரமம் உள்ளது. எனவே, வீதி வாரியாக புதிதாக மழைநீர் சேகரிப்பிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதேபோல், நெய்க்காரப்பட்டி கொட்டனத்தான் ஏரியில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர். இதேபோல், சேலம் மாவட்ட பாஜ நிர்வாகிகள் அளித்த மனுவில், ‘சேலம் அம்பாள் ஏரி மற்றும் பனமரத்துப்பட்டி ஏரியில் உள்ள சீமைகருவேல மரங்களை அழிக்க வேண்டும். மேலும், திருமணிமுத்தாற்றில் போடப்பட்டுள்ள காங்கிரீட் தங்களை இடித்து, மழைநீர் நிலத்தடியில் இறங்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்,’ என கோரிக்கை வைத்தனர்.