குமாரபாளையம், ஜூன் 25: குமாரபாளையத்தில் புதியதாக போடப்பட்ட தார் சாலையில் சென்ற சரக்கு லாரி திடீரென புதைந்து சரிந்தது. குமாரபாளையம் நகராட்சியில் தரமற்ற பணிகள் தொடர்ந்து நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.குமாரபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தார்சாலை புதுப்பிக்கப்பட்டது. இந்த சாலையில் நேற்று மதியம் ரேஷன் பொருட்களை இறக்கச்சென்ற சரக்கு லாரி திடீரென புதைந்தது. சாலைக்கடியில் குறுக்காக செல்லும் சிறுபாலம் உடைந்து சக்கரம் புதைந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக டிரைவர், லோடு ஏற்றும் தொழிலாளர்கள் காயமின்றி தப்பினர். அரசு பள்ளிகள், விசைத்தறி கூடங்கள் நிறைந்த இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து காணப்படும். நடுரோட்டில் லாரி சிக்கியதால் அந்த வழியாக சுமார் இரண்டு நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, கிரேன் கொண்டுவரப்பட்டு போராடி புதைந்த லாரியை மீட்டனர்.