வலங்கைமான், ஜூன் 25: வலங்கைமான் வட்டா விவசாயிகள் வேளாண்மைத்துறையின் மூலம் வழங்கப்படும் நுண்ணீர் பாசணகருவிகளை பெற்று தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் அழைப்பு விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டாரத்தில் வேளாண்மைத்துறை மற்றும் நிம்பஸ் நிறுவனம் இணைந்து சுமார் 46 கிராமங்களில் நுண்ணீர் பாசன திட்ட தீவிர முனைப்பு இயக்கம் நடத்தப்பட்டது.அதில் இருமடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம் பெற விவசாயிகள் அனைவரும் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசன திட்டம் மற்றும் சிக்கன நீர் பாசன முறையை கடைபிடிக்க வேண்டும் எனவும், கடந்த ஆறு மாதமாக மழை பொய்த்துப் போனதாலும் தற்போது அதிகமாக வறட்சி நிலவுவதாலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதாலும் ஒவ்வொரு துளி பாசன நீரையும் சிக்கனமாகவும், திறன்படவும் பயன்படுத்தும் வகையில் தமிழகஅரசு வேளாண்மைத்துறை மூலம் நுண்ணீர் பாசனத் திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் மூலம் பாசனநீர் விரயமாகாமல் நேரடியாக செடியின் வேர்பகுதிக்கு செலுத்தப்படுகிறது. அதனால் தண்ணீரின் அளவை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் வேளாண்மை கருவிகளான தெளிப்பு நீர் கருவி மழைத்தூவான் மற்றும் சொட்டுநீர் பாசன கருவிகள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.