சீர்காழி, ஜூன் 25:சீர்காழி அருகே பாலம் பழுதானதால் இரு கிராமங்கள் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சீர்காழி அருகே வெள்ளப்பள்ளம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் வெள்ளப்பள்ளம் உப்பனாற்றில் அமைக்கப்பட்டுள்ள சிறிய கம்பி நடை பாலத்தை கடந்துதான் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வரவேண்டும். குறிப்பாக புதுத்துறை ஊராட்சியில் வெள்ளப்பள்ளம் கிராமம் இருப்பதால் ரேஷன் கடை, கிராம நிர்வாக அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலகம், ஊராட்சி அலுவலங்களுக்கு இந்த பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும் வெள்ளப்பள்ளம் உப்பனாற்றில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் நடந்து செல்லும் அளவில் சிறிய கம்பி பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாலம் சில ஆண்டுகளில் பழுதடைவதும் அதனை மாற்றி விட்டு புதிய பாலம் கட்டுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.இந்த பாலங்கள் கட்ட ஒவ்வொரு முறையும் ரூ.5 லட்சம், ரூ 10 லட்சம், ரூ 15 லட்சம் என நிதி என ஒதுக்கப்படுகிறது. ஆனால் வெள்ளப்பள்ளம் பகுதி மக்களுக்கு நிரந்தரமாக பாலம் கட்ட தீர்வு கிடைக்கவில்லை. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வெள்ளப்பள்ளம் ஆற்றில் கட்டப்பட்ட கம்பி பாலம் பழுதடைந்ததால் வெள்ள பள்ளத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆற்றில் இறங்கி புதுத்துறை கிராமத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. அப்போது வெள்ளப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த ஒருவர் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து வெள்ளப்பள்ளம் உப்பனாற்றில் ரூ.15 லட்சத்தில் புதிய கம்பி பாலம் அமைக்கப்பட்டது.