அருப்புக்கோட்டை, ஜூன் 21:அருப்புக்கோட்டையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னையை சரிசெய்ய சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.ஆலோசனைக்கு பின் அவர் கூறியதாவது: அருப்புக்கோட்டை நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு மிகவும் மோசமாக உள்ளது. ஒரு நாளைக்கு வைகையிலிருந்து சராசரி 25 லட்சம் லிட்டர் தண்ணீரும், தாமிரபரணியிலிருந்து 35 லட்சம் லிட்டர் தண்ணீரும் மொத்தம் 60 லட்சம் லிட்டர் தண்ணீர் நகராட்சிக்கு கிடைத்தது. தற்போது வைகையில் முழுவதுமாக தண்ணீர் வரத்து இல்லை. தென்மேற்கு பருவமழை இன்னும் பெய்யாத காரணத்தால் தாமிரபரணியில் உள்ள அணைக்கட்டுகளில் நீர்வரத்து இல்லை.தற்போது தாமிரபரணியிலிருந்து சராசரி தினமும் 20 லட்சம் லிட்டர் அளவிற்குதான் தண்ணீர் கிடைக்கிறது. அதுவும் மின்தடை இருந்தாலும் ஒருநாள் தண்ணீர் வரத்து இல்லாமல் போகிறது. கிடைக்கக்கூடிய 20 லட்சம் லிட்டர் தண்ணீரை வைத்துதான் 60 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கிய இடத்தில் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை பிரித்து கொடுக்க வேண்டியுள்ளது. 15 நாட்கள், 20 நாட்கள் என சுழற்சி முறையில் வழங்கப்பட்ட குடிநீர் தற்போது நாட்கள் தள்ளிப்போகிறது.லாரி, டிராக்டர்கள் மூலம் தண்ணீர் வழங்க ஆய்வு மேற்கொண்டுள்ளேன்.